Thursday, March 18, 2021


 🙏சிவபுராணம்🙏

மனக்கவலை நீங்கி  ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா நிலை அடையவும் ஓத வேண்டிய பதிகம்

பாடியவர்: மாணிக்கவாசகர்       தலம்: திருப்பெருந்துறை


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க

கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் 

அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்


கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்


எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே


ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்

சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை


மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்

புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி

மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்


தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப

ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே


அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.

No comments:

Post a Comment