Friday, March 5, 2021

                                                            ஞான யோகம்-1

எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம், பிரகாசிக்கிறதோ, அந்த பிரம்ம வடிவாகவே உலகம் உள்ளதோ; உலகம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு, பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. இதுவே ஞானம்.

தங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் இறைவனே.

மனதிற்கு விழிப்பு நிலை - கனவுநிலை - உறக்கநிலை உள்ளது. இந்த மூன்று நிலைகளுக்கும் முறையே சத்வம் - ரஜஸ் - தமஸ் எனும் முக்குணங்கள்காரணங்களாகும்; மேலும் அத்யாத்மம் (புலன்கள்), அதிபூதம் (மண், முதலிய பஞ்சபூதங்கள்), அதிதைவம் (கர்த்தா எனும் செயல் செய்பவன்) என்று மூன்று வகையான வேறுபாடுகள் உள்ளன. மும்மூன்றாக இருப்பனவெல்லாம் எவருடைய இருப்பில் உண்மை போல் காட்சியளிக்கின்றனவோ, சமாதி நிலையில் மூவகை வேறுபாடுகள் இல்லாத போதும் எது எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறதோ, அந்த நான்காவது தத்துவம் - பிரம்ம தத்துவம் - அதுவே சத்தியம்.

படைப்புக்கு முன் எது இருக்கவில்லையோ, பிரளயத்துக்குப் பின் எது இருக்கப் போவதில்லையோ, அது, அந்த இடைப்பட்ட காலத்திலும் இல்லை - என்றே கருதவேண்டும். ‘ உலகம் இருக்கிறது’ என்பது வெறும் கற்பனையே. ஒரு பொருள் எதனால் ஆக்கப்படுகிறதோ, எதனால் பிரகாசிக்கப்படுகிறதோ, அதுவே - அந்த காரணப் பொருளே - இதன் உண்மையான வடிவம் என்பது உறுதியான உண்மை. இதுவே முடிவான முடிவாகும்.

பற்பல மாறுதல்களை அடையும் பிரபஞ்சம், உண்மையில் இல்லாத போதிலும், இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. இது சுயம்பிரகாசமான பிரம்மமே ஆனதால், புலன்கள், விஷயங்கள், மனம், பஞ்சபூதங்கள் என பல்வகை நாம-ரூபங்கள் உண்டோ, அவை அத்தனையிலும் பிரம்மமே விளங்குகிறது.

வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் மூலம் கேட்டல், (சிரவணம்) கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல் ( மனனம்), கேட்டதை மனதில் அசைபோடுதல் (நிதித்யாசனம்), ஸ்வாநுபூதி, முதலிய சாதனங்கள் வழியாக ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மவிசாரம் செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமேயான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.

இது போன்ற அனாத்மா பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், சப்தம் முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் மூன்று குணங்களின் சாம்ய அவஸ்தையான இயற்கையும் (பிரகிருதி) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்).

ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அடைந்தவன், உலகாயத சுக-துக்கங்கள் பாதிப்பதில்லை. சுகம் வரும் போது அவன் மகிழ்வதில்லை. துயரம் வரும் போது வருந்துவதில்லை. ஆத்மானந்தத்தில் மூழ்கியிருப்பவனுக்கு, உலக விசயங்களினால் உண்டாகும் சுக - துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை.

ஆகாயம், வாயுவால் உலர்த்தப்படுவதில்லை; நெருப்பினால் எரிக்க முடியாது; நீரினால் ஈரப்படுத்த முடியாது; பூமி தனது புழுதியால் மாசுபடுத்த இயலாது; காலங்களின் தன்மைகளான வெப்பம் - குளிர் ஆகியவாற்றால் பாதிக்கப்படுவதில்லை. காரணம், இந்தத் தன்மைகள் எல்லாம் சில நேரங்களில் மட்டுமே இருப்பவை. ஆனால் ஆகாயாமோ, இவைகள் எல்லாவற்றிக்கும் ஆதாரமாக இருப்பது. அதுபோலவே, சத்வ-ரஜஸ்-தமஸ் எனும் முக்குணங்களின் செயல்களும் கர்மாவும், அழிவில்லாத ஆத்மாவை தொடக்கூட முடியாது. ஆத்மா இவைகளுக்குக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஆனால் இவைகளில் அகங்காரம் கொண்டிருப்பவன் (இவைகள்தான் நான் என்று எண்ணிக் கொண்டிருப்பவன்) துயரக்கடலில் சிக்கித் திரிகிறான்.

பகவானிடம் பக்தி செலுத்துவதால் மட்டுமே, மனதின் தோஷமாகிய ரஜோகுணத்தைப் போக்கிக் கொள்ளும் வரை மாயையின் காரியமான குணங்களுடன் சம்பந்தத்தை தவிர்க்க வேண்டும்.

ஆத்ம ஞானத்தை நன்கு அடையாதவனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள கர்ம பதிவுகள் அடிக்கடி தலைதூக்கி, அஞ்ஞானம் தலைதூக்கச் செய்து, யோகப்பிரஷ்டனாக்கிவிடும் (ஆத்மவித்தையை அடையாமல் ஒதுக்கி வைக்கப்படுவர்).

ஞானப் பயிற்சி செய்து முன்னேறும் யோகிகளை, உறவினர்கள், நண்பர்கள் பந்த பாசத்தையோ அல்லது கவலையோ ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் அவர்கள் தன் நிலையில் இருந்து வழுக்கி விழுந்து விடுவார்கள். அப்படிபட்டவர்கள் அடுத்த பிறவியில், முன் பிறப்பில் விட்ட இடத்திலிருந்து ஞான யோகப் பயிற்சியை தொடங்குவார்கள். கர்மாக்களில் பற்று வைக்க மாட்டார்கள்.

ஞான யோகத்தை அடைந்து பண்டிதனாக விளங்குபவன், உலகத்தில் வாழ்ந்து கொண்டே கர்மவினைப்படி செயலாற்றிக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சி - வருத்தம் முதலிய மன மாற்ற்ங்களை அடைவதில்லை. ஆத்மாவில் அறிவை நிலைநிறுத்திய ஆத்ம ஞானி, இந்த உடல் செயல்படுகிறது என்பதையே அறிய மாட்டான்.

உடலிலும் உலகிலும் தான் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆனால் ஆத்மா எப்போதும் ஒரேவிதமாக மாற்றமின்றி உள்ளது என்ற உண்மையை ஞானி அறிந்து கொள்கிறான்.

பகவானின் சாக்ஷாத்காரம் (உணர்வு) ஏற்பட்டதும், மனிதனின் மனதை மூடியிருந்த அக்ஞானம் விலகி, ஆத்ம சொரூபமாகி விடுகிறான்.

ஆத்மா அது நம்மால் அடையப்பட்ட பொருள்; சுயம்பிரகாசமானது; பிறப்பில்லாதது; அளவிடமுடியாதது; எல்லா அனுபூதிகளும் அதிலே நிகழ்கிறது; எல்லா விபூதிகளையும் (பெருமைகளையும்) தன்னுள் கொண்டது; தனக்குச் சமமான இரண்டாவது வஸ்து (பொருள்) இல்லாத தனிப்பொருள்; மனம் - வாக்குகளுக்கு எட்டாதது; நிர்குணமானது; அருவமானது; வடிவம் அற்றது; குணதோசங்களை கடந்தது.

இரண்டாவதற்ற அகண்ட ஆத்ம தத்துவத்தில், அஞ்ஞானத்தின் காரணமாக வேற்றுமை காண்ப்து, மனதின் மயக்கமே. சீவன், பிரகிருதியின் தொடர்பால் அகங்காரமடைந்து பேதத்தைக் கற்பிக்கிறது. மன மயக்கத்துக்கும், அக்ஞானத்துகும் (அறியாமை) தனித்துவமான இருப்பு இல்லை. வித்தியாசங்கள் காணப்படுகிறது எனில் அது ஆத்மாவை அதிஷ்டானமாகக் கொண்டுதான் காணப்படுகிறது.


No comments:

Post a Comment