Monday, March 29, 2021


 சித்தர் சிவவாக்கியரின்!!

பாடல்:0️21.

சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்.

மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை

சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்.

கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.

பொருள் : -

நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு.

அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை,

சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது.

இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது.

அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி.

இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும்.

இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.

🙏திருச்சிற்றம்பலம்🙏

சித்தர் சிவவாக்கியரின்!!

பாடல்:0️22.

தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல்.

செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே

விங்களங்கள் பேசுவோர்.

விளங்குகின்ற மாந்தரே

எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே.

பொருள் :-

தங்கம் என்ற ஒரு பொருளில் இருந்தே கம்மல், வளையல், மோதிரம், தாலி, மூக்குத்தி போன்ற நகைகள் பல வகைகளில் உருவாகி வெவ்வேறு தன்மைகளில் விளங்குகின்றது.

அதுபோலவே ஒன்றான பிரமத்தில் இருந்தே திருமாலும், ஈசனும் சிறந்த மெய்ப்பொருளில் அமர்ந்திருந்து நமக்குள்ளே இருக்கின்றார்கள்.

இதனை அறியாமல் விஷ்ணு பெரியது, சிவன் பெரியது என்று வியாக்கியானங்கள் பேசி வாழ்பவர்கள் வாழ்வு விளங்காது.

நமக்குள் இருந்த பரம்பொருளே இப்பிரபஞ்சம் முழுவதும் நின்றிப்பதை அறிந்து சிவனும் ஈசனும் ஒன்றாகவே விளங்கும் ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.

🙏திருச்சிற்றம்பலம்🙏

சித்தர் சிவவாக்கியரின்!!

பாடல்:0️23.

அஞ்செழுத்திலே பிறந்து. 

அஞ்செழுத்திலே வளர்ந்து.

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.

அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்.

அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.

பொருள் :-

ஐந்து பூதங்களால் பிறந்து அந்த ஐந்து பூதங்களின் தன்மைகளால் வளர்ந்து அஞ்செழுத்தில் உண்மைகளை உணராது.

அதனை பஞ்சாட்சரமாக வெறும் வாயால் மட்டும் அஞ்செழுத்து மந்திரமாக ஓதி வரும் பஞ்சபூதங்களால் ஆன பாவிகளே.

பஞ்சபூதங்களும் நமக்குள்ளே பஞ்சாட்சரமாக இயங்கி வருகிறது என்ற உண்மையை உணர்ந்து,

அறிந்து அதனை அஞ்செழுத்தால் அதற்குறிய இடத்தில் வைத்து ஓதி தியானியுங்கள்.

நமச்சிவய என்ற அஞ்செழுத்தில் ஒரேழுத்து என்ன என்பதை அறிந்து அதிலேயே நினைவால் நிறுத்தி செபித்து தியானிக்க வல்லவர்களானால். 

அந்த அஞ்செழுத்தும் ஒரேழுத்தாகி நிற்கும் அம்பலமான கோயிலில் ஈசன் அஞ்சல் அஞ்சல் என்று நடராஜனாக ஆடி நிற்பான்.

🙏திருச்சிற்றம்பலம்🙏

சித்தர் சிவவாக்கியரின்!!

பாடல்:0️24.

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே.

பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்.

நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்.

அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் தோன்றுமே.

பொருள் :-

அஞ்செழுத்தே ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்கலாகவும் நமது உடம்பில் இருந்து இயங்கி அனாதியான பஞ்சாட்சரமாக இருக்கின்றது.

அதுவே சீவனாகி என்றும் அன்னதியாக உள்ள சிவனால் ஜீவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. 

அதுவே பின்ஜெழுத்தான வாலையாக ஒரேழுத்தாகி உள்ளது.

இதனை அறியாமல் பித்தர்களைப் போல் வெறும் வாயால் மட்டுமே பிதற்றுவதால் பயன் ஏது.

அந்த அஞ்செழுத்தாக ஆகியிருப்பது இன்னது என்பதை அறிந்து கொண்டு நெஞ்சமாகிய கோவிலிலே அஞ்செழுத்து ஓதி உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து அங்கேயே நினைவை நிறுத்தி அதிலேயே நின்று தியானிக்க வல்லவர்க்கு அஞ்செழுத்தும் இல்லை ஆறாதாரங்களும் இல்லை.

அஞ்செழுத்தும், ஆறு ஆதாரங்களில் உள்ள தெய்வ சக்திகளும் ஒன்றான சிவமாகி அனாதியாகத் தோன்றும்.

🙏திருச்சிற்றம்பலம்🙏


No comments:

Post a Comment