Friday, March 5, 2021

 

                                              ஞான யோகம் 

ஞான யோகம் என்பதற்கு ஞானமும் யோகமும் ஒன்று சேருவதே ஆகும். ஞானம் எனும் சொல்லுக்கு தன்னைப் பற்றிய அறிவை அடையும் சாதனையாகும்.

 யோகம் எனும் சொல்லுக்கு, சாதனம் அல்லது கருவி என்று பொருள். எனவே ஞானம் எனும் சாதனை அடைய யோகம் எனும் சாதனம் (கருவி) அவசியம்.

இந்த ஞான சாதனம் எந்த இலக்குவை அடைய முயற்சி செய்வது எனில் தன்னைப் பற்றிய ஞானம் அடைவதே. தன்னைப் பற்றிய ஞானம் அடைவது எனில் தன்னில் நிலைபெற்ற ஆத்மாவை பற்றிய ஞானத்தை அடைதலே ஆத்ம ஞானம் ஆகும். இந்த ஜீவாத்மா ஆத்ம ஞானத்தை அடைய ஞானயோகம் சிறந்த வழியாகும். [1]

ஆத்ம ஞானத்தை அடையும் வழிகள்

• இந்த ஆத்ம ஞானத்தை அடையும் வழிமுறைகளில் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளது. ஒன்று ஞான சாதனை. இரண்டாவது யோக சாதனை. ஞானத்திற்கான சாதனை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று, வேதாந்த சாத்திரங்களை கேட்டல், கேட்டவைகளை அறிவினால் விசாரித்து ஆராய்ந்து சிந்தித்து தெளிவடைவதே ஞானம்.

• ஆத்ம ஞானம் என்பது “நான்” என்ற என்ற சொல்லினை விசாரித்து அறிந்து கொள்வதே ’ஞானம்’ என்பர்.

ஞானத்தை அடைய படிநிலைகள்

1. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து கொள்ளும் தன்மையே அறிவே. எடுத்துக்காட்டாக, இது தர்மம் - இது அதர்மம், இது உண்மை - இது பொய், இது நல்லது -இது கெட்டது, இது நன்மை - இது இன்பம், இது அழிவற்றது - இது நிலையானது என்று அறிவினால் பிரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை விவேக புத்தி என்பர்.

2. வினிச்சய புத்தி: ஒன்றை நன்கு பிரித்துப் பார்க்கும் விவேக புத்தி இருந்தும், அந்த அறிவில் உறுதி இல்லை எனில் அதற்கு வினிர்ச்சய புத்தி என்பர்.

3. விசுத்த புத்தி: மனத்தூய்மை, கபடமற்ற குணம் மற்றவர்களை ஏமாற்றாத மனம் உடையவர்களை விசுத்த புத்தி உடையவர்கள் என்பர்.

4. விசால புத்தி: பரந்த மனதை உடையவர்கள், பிறர் பொருளில் ஆசை கொள்ளாதிருத்தல்; அதே நேரத்தில் நமது பொருளை பிறருடன் பகிர்ந்து கொள்வது விசால புத்தி (பரந்த மனப்பான்மை) என்பர்.

5. நிச்சல புத்தி: ஒன்றிலேயே நமது மனதை பொருத்திப் பழகும் தன்மையை உறுதியான புத்தி அல்லது நிச்சல புத்தி என்பர்.

6. திட புத்தி: துன்பங்கள், துயரங்கள், நட்டங்கள் வரும் போது அதனை தாங்கிக் கொள்ளும் உறுதியான மனம் தேவை. அத்தகைய மனதிற்கு திட புத்தி என்பர்.

7. ஜாக்கிரத் புத்தி: விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் மனம் அல்லது அறிவு அல்லது புத்தியை விழிப்புநிலை புத்தி என்பர்.

யோகம் என்பதின் பொருள்[தொகு]

யோகத்தை மனதின் அமைதி என்றும், மனதை சாத்வீக குணத்திற்கு மாற்றி அமைத்தல்` என்றும், நமது எண்ணங்களின் அமைதியே யோகம் என்றும், அலைபாயும் மனதை நமது மனதின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தும் செயல்களுக்கு யோகம் என்பர்.

சுகம்-துக்கம் போன்ற இருமைகளை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ளும் திறன் நமக்குத் தேவை. நமது மனம் சாத்வீக குணத்தில் நிலையில் நிலை நிறுத்த வேண்டும். மனம் நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படிப்பட்ட நற்குணங்களில் நமது மனதை நிலை நிறுத்த செய்தலே யோகம்ஆகும்.

யோகத்தை அடையும் வழிகள்

முதலில் மனதை சத்துவ குணத்தில் மனதை நிலை நிறுத்த வேண்டும். பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில், தியானம் எனும் தொடர் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மட்டுமே மனதை நம் கட்டுக்குள் வரமுடியும் என வழியுறுத்துகிறார். வைராக்கியம் எனில் உலக இன்பங்களில் ஆசைப்பட்டு அதற்கு அடிமையாக இல்லாமல் இருப்பதே. விவேகம், வைராக்கியத்தை அடைந்து, மன ஒருமுகப்பாடு, மனத்தூய்மை, புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை, தவம், தியாகம் ஆகிய சாதனைகளால் யோகத்தை எளிதாக அடைய முடியும்.

மனம் வைராக்கியம் அடைவதற்கான வழிகள்

மனப்பக்குவமே வைராக்கியம் என்பர். தவத்தாலேயே வைராக்கியத்தை அடைய முடியும். அந்த மனதுடன் ஆத்ம ஞானத்தை அறிந்தால் சீவ முக்திஉறுதியாக கிடைக்கும். ஒரு பெருந் துயரத்தை கடக்க சிறிய கஷ்டங்களை தாங்கிக் கொள்ள நம் மனம் பழகிக் கொள்ள வேண்டும். தவத்தின் மூலம் யோகத்தை அடைந்து மனதை நம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

உடல் அளவில் செய்யும் யோகாசனம் எனும் தவத்தால் சோம்பல் நீக்கப்படுகிறது. மேலும் உடல் தூய்மை, சமூகப் பணி, குரு சேவை ஆகியவற்றாலும் சரணாகதி எனும் பணிவு குணங்களினாலும் நாம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டு மன வைராக்கியம் அடையலாம்.

ஞான யோகமும் அதன் பலன்களும்

ஞானயோகத்தை அடைவது என்பதும், ஆத்மஞானத்தை அடைவது என்பதும் ஒன்றே. உயிருடன் இருக்கும் போதே ஞானமும் யோகமும் அடைவதே சீவ முக்தி என்பர். ஆத்ம ஞானி என்றால் ஆத்மஞானத்தை அறிந்தவன் என்று பொருள். யோகி எனில் ஸித்தி ’ அடைந்தவர் என்று பொருள். சீவ முக்தி எனும் மோட்சத்திற்கு இலக்கு ஆத்ம ஞானம் ஒன்று மட்டுமே. ஞானத்தை அடைவது எளிது என்றும், யோக சித்தியை அடைவது கடினம் என்று கருதுகிறார்கள்.

ஞானத்தை அடைய அதற்கான பிரமாணங்கள் (கருவிகள்) எனும் வேதாந்த சாத்திரங்களை மரபு வழி வந்த குருவின் மூலம் கேட்டு, சிந்தித்து விசாரித்து அறியவேண்டும். சாத்திரங்களை சரியான முறையில் பகுத்தாய்வு (விசாரணை) செய்யாவிட்டால் விபரீத ஞானம் ஏற்படும். மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு, அறிவைத் தரும் சரியான கருவிகள் (பிரமாணங்கள்) இருப்பினும் பலனில்லாமல், விபரீத ஞானம் உண்டாகும். இதனை ஞான ஆபாசம் (ஞானம் வந்து விட்டது போல் தோண்றும் உணர்வு) என்பர். எனவே யோகத்தினால் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.

எனவே ஞான சாத்திரங்களை தொடர்ந்து பயில்பவர்கள், யோகமும் பயில வேண்டும். ஞான சாத்திரங்களை பயில்பவர்களின் வாழ்க்கையை விட யோகம் பயின்றவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும். பலர் என்னதான் சாத்திரங்கள் பயின்றாலும், அதன்படி ஏன் நடந்து கொள்ள இயலவில்லை எனில் யோகப் பயிற்சி இல்லாத காரணத்தினால்தான். நமது உடல் பல உறுப்புக்களின் சேர்கையாக அமைந்துள்ளது. அறிவு/புத்தி கட்டளை இட்டாலும், சக்தியற்ற உறுப்புக்கள் புத்தியிட்ட கட்டளைகளை நிறைவேற்ற இயலாது. அது போல் ஞானம் இருந்தும் யோகம் இல்லை எனில் ஞானத்தினால் கிடைக்க வேண்டிய பலன்களான சீவன் முக்தி எனும் மோட்சம் கிடைப்பதரிது.

ஞானம் எனும் அறிவு ஒரு பொருளை கண்ணாடி போன்று உள்ளது உள்ளபடி காட்டும். எனவே ஒரு பொருளை பகுத்தாராய்வு செய்ய நம் மனதில் உள்ள தீய குணங்களை நீக்கி தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஞானத்தை அடைய யோகம் எனும் சாதனை அவசியமாகும். இந்த ஞான யோகத்தின் மூலம் தத்துவமசி என்ற மகாவாக்கிய ஞானம் மற்றும் அஹம் பிரம்மாஸ்மி போன்ற ஞானம் நம்முள் உண்டாகும்.

ஞான யோக சாரம்[தொகு]

உலக விவகார நோக்கில், புருஷன், பிரகிருதி எனப்படும் பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் என்ற வேற்றுமை தோண்றுகிறது. ஆனால் அந்தராத்மாவில் பார்க்கும் போது இப்படிப்பட்ட வேற்றுமைகள் கிடையாது. எல்லாம் பரமாத்ம வடிவமே. அதனால், ஒருவனின் இயல்பான குணத்தையோ, அதை ஒட்டிப் போகும் நடவடிககைகளையும் பார்த்து யாரையும் இகழவோ, புகழவோ கூடாது. பிறரின் இயல்புகளையும், செயல்களையும் விமர்சனம் செய்பவன் ஞான நிஷ்டையிலிருந்து நழுவி விடுகிறான்.

ஆத்மாவின் சொரூபம்:- இவ்வுலகில் பார்க்கப்படும் பொருள்கள், பார்வைக்கு அகப்படாத பொருள்கள் ஆகிய எல்லாமே, பரமாத்மாதான். அவரே உலகத்தை படைக்கிறார், உலகமாகவும் ஆகிறார். உலகத்தைக் காப்பாற்றுகிறார், காப்பற்றப்படுபவராகவும் இருக்கிறார், அவரே உலகத்தை அழிக்கிறார், அழிக்கப்படும் பொருளாகவும் இருக்கிறார். (செய்பவரும், செய்யப்படும் பொருளும் அவரே; ஆத்மாவன்றி வேறோன்றில்லை. விவகார நோக்கில் பார்க்கையில் ஆத்மா, இவ்வுலகிலிருந்து வேறுபட்டது. ஆனால் ஆன்ம நோக்கில் பார்த்தால் அதைத் தவிர வேறு பொருளே இல்லை.

ஆத்ம தத்துவத்தை வாயால் சொல்ல இயலாது (அனிர்வசநீயம்). படைப்பு - நடப்பு - துடைப்பு அல்லது அத்யாத்மம் - அதிதைவம் - அதிபூதம் என்று ஆத்மாவில் கற்பிக்கப்பட்டுள்ள நிலைகள் ஆதாரமற்றவை. இவைகள் இல்லை என்றாலும் இருப்பன போல் தோற்றமளிக்கிறது. இவை சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் ஆகிய முக்குணங்களால் தோன்றுவன. காண்பவன் - காட்சி - காணப்படும் பொருள் என்று மாயையின் மூன்று வகையான விளையாட்டுகள் இது.

இந்த உலகம் தோற்றம் - அழிவு உடையதாக இருப்பதால், அநித்தியம் - அசத்தியம் என்பதை, பிரதட்சம் - அனுமானம் - வேதாந்த சாத்திரங்கள், ஆப்த வாக்யம், சுய அனுபவம் மற்றும் குரு உபதேசம் எனும் பிரமாணங்களால் (கருவிகளால்) உறுதியாகிறது. எனவே உலகம் அநித்தியம், அசத்தியம் என்பதை உணர்ந்து, எதனுடன் ஒட்டுதல் இன்றி வாழவேண்டும். (சங்கத்தில் நிஷ்சங்கமாக வாழவேண்டும்).

சோகம், மகிழ்ச்சி, அச்சம், கோபம், லோபம், மோகம், வேட்கை, பிறப்பு-இறப்பு இவையெல்லாம் அகங்காரத்துக்கே அன்றி, ஆத்மாவுக்கு அல்ல.(சான்றாக, அகங்காரமில்லாத ஆழ்ந்த உறக்கத்தில், துயரங்கள் - குழப்பங்கள் ஏற்படுவதில்லை. சுக - துக்கங்கள் ஆத்மா சம்பந்தப்பட்டதாக இருந்தால் உறக்கத்திலும் அவை ஏற்பட வேண்டும். எனவே அவைகள் இந்த உடலின் தர்மங்கள் தவிர ஆத்மாவுடையதல்ல).


ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் பிராணன், மனம் ஆகியவற்றால் நிலைபெற்றுள்ள ஆத்மா, இவைகளில் பற்று கொண்டு, இவைகளே நான் என்று கருதும் போது, சீவன் என்று அழைக்கப்படுகிறது. அதிநுட்பமான ஆத்மாவின் மூர்த்திதான் - குண கர்மங்களான லிங்க சரீரம், அல்லது சூத்ராத்மா, அல்லது மஹத் தத்துவம் என்பர். அவன் காலரூபியான பரமேசுவரனுக்கு அடங்கி சம்சாரச் சக்கரத்தில் சுழல்கிறான்.

விவேகியானவன், நல்ல குருவை அணுகி ஞானோபதேசம் பெறவேண்டும். மிகவும் கூர்மையாக தீட்டப்பட்ட ஞானம் எனும் வாளைக் கொண்டு அக்ஞானம் எனும் அகங்காரத்தை ஆணி வேருடன் வெட்டித்தள்ளி ஏகாத்மபாவம் எனும் உண்மை அடைந்தவன் உலகில் இரண்டற்றவனாக சுற்றித் திரியலாம். அந்த நிலையில் அவனிடம் எவ்வித பற்று-வெறுப்பு இருப்பதில்லை.

No comments:

Post a Comment